ரூ.63 ஆயிரம் கோடியில் மேலும் 26 ரஃபேல் போர் விமானங்கள்…. ஒப்பந்தம் கையெழுத்து..!

இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரான்சும் நேற்று (ஏப்.28 2025) கையெழுத்திட்டன.
புதுடெல்லி ஏப்ரல் 29 2025

இந்தியா- பிரான்ஸ் இடையே, இந்தியக் கடற்படைக்காக ரூ. 63,000 கோடி மதிப்புள்ள 26 ரபேல்-எம் (Rafale-M)போர் விமானங்களை வாங்கும் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் திங்கட்கிழமை (ஏப்ரல் 28, 2025) கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவின் கடற்படை திறன்களை மேம்படுத்துவதோடு, பிரான்ஸுடன் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. ரபேல்-எம் விமானங்கள், உலகின் முன்னணி கடற்படை போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
இந்த ஒப்பந்தம் 22 ஒற்றை இருக்கை ஜெட் விமானங்கள் மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்களை கொண்டுள்ளது. இதன் விநியோகம் 2031 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பிரெஞ்சு கடற்படையிடம் மட்டுமே இந்த ஜெட் விமானம் உள்ளது.
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

- 22 ஒற்றை இருக்கை மற்றும் 4 இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள்
- ஒப்பந்த மதிப்பீடு தோராயமாக ரூ. 63,000 கோடி
- 2031-ஆம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் வழங்கப்படும்
- விமானங்களின் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி
- ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, விமான பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் ஏற்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியது.
இந்த விமானங்கள் இந்திய கடற்படையின் கடல்சார் சக்தியை அதிகரித்து, இந்தியப் பெருங்கடலில் எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவும். மேலும் முந்தைய MiG-29K விமானங்களை இவை மாற்றும்.
இதன் மூலம் விமானங்களுக்கு ‘பஃடி-பஃடி’ (Buddy-Buddy) எரிபொருள் நிரப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன்மூலம் ஒரு விமானம் மற்றொரு விமானத்திற்கு பறக்கும் நிலையிலேயே எரிபொருள் நிரப்ப முடியும்.
தற்போது, இந்திய விமானப்படை 36 ரஃபேல் ‘C’ வகை விமானங்களை வடக்கு இந்தியாவிலுள்ள இரு விமானத் தளங்களில் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




