பால், உர உற்பத்திகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பால் உற்பத்தியை ஊக்குவித்தல், உர உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், நாட்டின்கால்நடை இனங்களைப் பெருக்குவதற்கும் உதவும் வகையில், ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்திற்கு ரூ.3,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நாடு முழுவதும் பால் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.2,790 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், சந்தைகளை இணைத்தல் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அசாம் மாநிலம் நம்ருப் நகரில் ரூ.10,601 கோடி செலவில் அம்மோனியா – யூரியா உற்பத்தி ஆலை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை உற்பத்தி செய்யும். இதன்மூலம் இறக்குமதித்தேவையைக் குறைத்து, யூரியா பற்றாக்குறையைத் தீர்க்க முடியும்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் திட்டம் 2024-25 நிதியாண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.




