வரியை குறைக்க அமெரிக்காவுக்கு எந்தவித உறுதிமொழியையும் தரவில்லை - இந்தியா பதில் !

புதுடெல்லி: “இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் ட்ரம்ப்பின் பேச்சு அல்லது ஊடகத்தில் வரும் அறிக்கைகள் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அமெரிக்கவுடனான வர்த்தக வரிகள் குறித்து இந்தியா எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை” என்று வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வால் தெரிவித்தார்.

வெளியுறவுத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வர்த்தகச் செயலாளர் சுனில் பர்த்வால் திங்கள்கிழமை விளக்கம் அளித்தார். அப்போது வரி குறைப்பு பற்றிய ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சு குறித்த கவலையை உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர்.
அப்போது பேசிய வர்த்தக செயலாளர், “இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்து இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனால் ட்ரம்ப்பின் பேச்சு அல்லது ஊடகத்தில் வரும் அறிக்கைகள் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அமெரிக்கவுடனான வர்த்தக வரிகள் குறித்து இந்தியா எந்தவிதமான உறுதிமொழியையும் அளிக்கவில்லை.
இந்தியா சுதந்திரமான வர்த்தகத்தை ஆதரித்தது, தாராளமயமான வர்த்தகத்தை விரும்பியது அதுவே இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை அதிகரிக்க உதவும். இந்தியா, அதிலும் குறிப்பாக உள்நாட்டு பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் வரிக் குறைப்பு செய்வதில்லை. தேசிய நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய, பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக இரு தரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா விரும்புகிறது.
கனடா மெக்சிகோவைப் பொறுத்த வரை, அமெரிக்காவுடன் அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் எல்லை தாண்டிய குடியேற்றம் போன்ற கவலைகள் இருப்பதால் அவர்களின் நிலைமை வேறு. ஒரு வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பரம் நன்மை அளிக்கும் என்றால் மட்டுமே இந்தியா அதில் கையெழுத்திடும்.” என்று உறுதிபடுத்தினார்.
இந்தியா வரியை குறைக்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் வர்த்தக செயலாளர் சுனில் பர்த்வாலின் பேச்சு அதை மறுப்பதை அமைந்திருக்கிறது.




