விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி பைனல்: மகுடம் சூடுமா இந்தியா ?

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன. 12 வருடங்களுக்குப் பிறகு: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கடைசியாக 2013-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இதன் பின்னர் 2017-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு கைகூடியுள்ளது.

ஐசிசி தொடர்களில் இந்திய அணி, நியூஸிலாந்துக்கு எதிராக 10 வெற்றிகளை பெற்றுள்ளது. அதேவேளையில் நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ஆனால் நாக் அவுட் சுற்று என்று வரும் போது நியூஸிலாந்து அணியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. நாக் அவுட் சுற்றில் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 3 முறை வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டு வெற்றி கண்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்த நிலையில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அரை இறுதியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள், 2 வேகங்கள் என்ற பாணியிலேயே களமிறங்கக்கூடும். வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களாக எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளித்து வருகின்றனர். அதிலும் புதிர் சுழற்பந்து வீச்சாளராக உள்ள வருண் சக்ரவர்த்தி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இடது கை, விரல் ஸ்பின்னர்களான அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் துல்லியமாக செயல்பட்டு நடு ஓவர்களில் எதிரணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ரூ.19.50 கோடி பரிசு: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெறும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button