தமிழகம்

மக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றுகிறது தமிழக அரசு- ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழக அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறதோ, அதேபோல் தான் அரசு ஊழியர்களையும் ஏமாற்றப் பார்க்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய முரண்பாடுகளை களைவது, தற்காலிக ஆசிரியர்களுக்கு பணிநிலைப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் இன்று அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஊதியம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருப்பது கண்டனத்திற்குரியது. உரிமைக்காகப் போராடும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்ற முடியாதவை அல்ல; புதிதாக முளைத்த கோரிக்கைகளும் அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை ஒரு கோரிக்கையை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை.

அரசு ஊழியர்களின் 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து கடந்த மாதம் 24-ஆம் தேதி அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், ஒரு மாதம் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து ஏமாற்றப்படுவதால் தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதே மக்கள் நல அரசின் கடமை. அவர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், தோல்வியே தமிழக அரசுக்குப் பரிசாகக் கிடைக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்த திமுக, அதில் 10 விழுக்காட்டைக் கூட நிறைவேற்றவில்லை. மக்களை எப்படி ஏமாற்றுகிறார்களோ, அதேபோல் தான் அரசு ஊழியர்களையும் ஏமாற்றுகிறார்கள். இனியும் தாமதிக்காமல் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வர அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்தால் கொதித்துப் போயுள்ள அரசு ஊழியர்கள், வரும் தேர்தலில் திமுகவை எதிர்க்கட்சியாக்குவோம் என சூளுரைத்துள்ளனர். அதே மனநிலையில் தான் மக்களும் இருக்கிறார்கள் என்பதால் வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டப்படும் என்பது உறுதி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button