
உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார்.
புதுடெல்லி மே 14 2025:

உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். இவர் தனது பதவிப் பிரமாணத்தை இந்தியில் எடுத்துக் கொண்டார்.
மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி கவாய், ஆறு மாதங்களுக்கும் மேலாக பதவிக் காலத்தைக் கொண்டிருப்பார். தொடர்ந்து இவர் 2025 நவம்பர் 23ஆம் தேதியன்று பதவி விலகுவார்.
இந்நிலையில், பி.ஆர் கவாய் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பல மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் முன்னாள் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2007 மற்றும் 2010 க்கு இடையில் பணியாற்றிய நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு, நீதிபதி கவாய், பட்டியல் சாதி (SC) சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது இந்திய தலைமை நீதிபதி ஆவார். கவாய் தனது சட்ட வாழ்க்கையை 1985 இல் தொடங்கினார்.
ஆரம்பத்தில் முன்னாள் அட்வகேட் ஜெனரலும் உயர் நீதிமன்ற நீதிபதியுமான மறைந்த ராஜா எஸ் போன்சாலேவுடன் பணியாற்றினார், பின்னர் 1987 இல் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.




