
முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்” என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புதன்கிழமை (ஏப்ரல் 16, 2025) வங்காளதேசத்தைச் சேர்ந்த சிலர் கலவரத்தில் ஈடுபட்டிருந்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
மேலும், முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறையை “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வகுப்புவாத கலவரம்” என்றும் அவர் கூறினார். இது குறித்து, கொல்கத்தாவில் இமாம்கள் மற்றும் முஅசின்களின் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார்.
அப்போது, “வங்கதேசம் இதில் ஈடுபட்டுள்ளது என்று உள்துறை அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி நேற்று ஒரு ட்வீட்டைப் பார்த்தேன். அப்படியானால், எல்லைகளை பி.எஸ்.எஃப் பாதுகாப்பதால் மத்திய அரசுதான் பொறுப்பு, நாங்கள் அல்ல. எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு இல்லை” என்றார்.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் வலையில் விழுந்து தெருக்களில் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டார். இது குறித்து பேசிய மம்தா பானர்ஜி, ‘எனது அரசாங்கத்தை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக பாஜக விரும்புகிறது.
அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் உங்களை சாப்பிடக்கூட அனுமதிக்க மாட்டார்கள். மேலும், பாஜக சொல்வதால் யாரும் கோபப்படக்கூடாது. இதனை, உறுதி செய்யும் பொறுப்பு இமாம்கள் மற்றும் முஅசின்களுக்கு உண்டு” என்றார்.
இதையடுத்து, வக்ஃப் (திருத்த) மசோதாவுக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராடினார்கள் என்ற மம்தா பானர்ஜி, இந்தியா கூட்டணி கட்சிகள் சட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கேட்டுக்கொண்டார்.




