ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வழக்கில் கைது – திடீர் திருப்பங்கள்…

கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது உறவினரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர், ஏப்ரல் 17 2025:
கிறிஸ்தவ மக்களிடத்தில் மிகவும் பிரபலமான பாதிரியாராக திகழ்ந்து வந்தவர் ஜான் ஜெபராஜ். கிறிஸ்தவ ஆன்மீக பாடல்களை கூட இவர் மேற்கத்திய இசையில் அழகாக பாடுவார்.
இவரது பாடல்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் பல்வேறு ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜின் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் சிறுமிகளுக்கு முத்தமிடுவது போல் காணப்பட்டது. இதற்கிடையில், ஜான் ஜெபராஜ் மற்றும் அவரது தொழில்முறை நண்பர் இடையே ஆன உரையாடல் ஒன்றும் லீக் ஆனது. அதில், தாம் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் காப்பாற்ற பட்டு இருப்பதாகவும்; அன்று என்ன நடந்தது என்பது உனக்கும் எனக்கும் தான் தெரியும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் மீது 14 மற்றும் 17 வயதுடைய இரு சிறுமிகள் கோவை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் கேரளாவில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக இவர் முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் திடீர் திருப்பம்
இந்த நிலையில் பாதிரியார் ஜான் ஜெபராஜ் வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது பாதிரியார் ஜான் ஜெபராஜ் உறவினரான டெனட் ஹாரிஸ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போச்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




