டாஸ்மாக் கடைகளில் முதல்வர் படம்: நூதன போராட்டத்தை தொடங்கிய தமிழக பாஜக !

சிவகங்கை: சிவகங்கை டாஸ்மாக் மதுக்கடையில் பாஜக பெண் நிர்வாகி தலைமையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி, மதுபான முறைகேட்டுக்கு தங்களது எதிர்ப்பை காட்டினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் சில தினங்களுக்கு மதுபான முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். அப்போது, பாஜக போராட்டத்துக்கு போலீஸார் தொடர்ந்து அனுமதி வழங்க மறுப்பதாகவும், இதனால் இனி போலீஸார் அனுமதியின்றி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அண்ணாமலை தெரிவித்தார்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் அரசு மதுக்கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டி, மதுபான முறைகேட்டுக்கு தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அதன்படி இன்று (புதன்கிழமை) சிவகங்கை பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசு மதுக்கடையில் மாவட்ட மகளிரணி அணி பொதுச் செயலாளர் ஹேமாமாலினி பீட்டர் தலைமையிலான பாஜகவினர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை ஒட்டி, தங்களது எதிர்ப்பை காட்டினர்.




