சோகத்தில் முடிந்த வெற்றி கொண்டாட்டம்; 11 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, ஜூன் 5 2025:

2025 ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில், ஆர்.சி.பி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றிக் கோப்பையை தனதாக்கியது. இந்த நிலையில், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) மாலை வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டத்தட்ட 11 பேர் வரை உயிரிழந்தனர்.
இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக பெங்களூரு நேற்று (ஜூன் 3 2025) சாம்பியன் பட்டம் வென்றது. இந்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டத்தை ரசிகர்களை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதையடுத்து வாயில்களில் குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி முதல்கட்டமாக 7 பேர் வரை உயிரிழந்தனர். இதற்கிடையில் தற்போது உயிரிழப்பு 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், “ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாடுவதாக இருந்த கொண்டாட்டம் ஒரு சோகமாக மாறியது, ஆழ்ந்த துக்கத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. உயிரிழந்தவர்களுக்கு எனது இரங்கல். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அணி மீது அன்பு இருக்கட்டும், ஆனால் உயிரை விட மதிப்புமிக்கது எதுவும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
பெங்களூர் சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.




