சிம்பொனி எழுத உதவி செய்தாரா லிடியன் ?- இளையராஜா விளக்கம்

சென்னை: “இசைத் துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை” என்று சிம்பொனி எழுத உதவியதாக கூறி வரும் லிடியனுக்கு பதிலளித்துள்ளார் இளையராஜா.
இளம் இசைக் கலைஞரான லிடியன் நாதஸ்வரம் தான் இளையராஜாவுக்கு சிம்பொனி எழுத உதவியதாக ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு, ‘இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே… இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள். அதன் பிறகு கம்போஸ் பண்ணு’ என்று சொன்னேன்.

சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு, அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்துக்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக்கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன். இத்தனை வருடங்களாக இசைத் துறையில் சொந்தக் காலில் நடப்பவன் நான். யாருடைய உதவியையும் எதற்கும் பயன்படுத்தியதில்லை. சொந்தக் கால் என்றால், செருப்பு கூட இல்லாத வெறுங்காலில் நின்று வளர்ந்தவன் நான்” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.




