ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு

வக்ஃப் சட்ட வழக்கில் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி, ஏப்.17 2025: வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு இன்று (ஏப்.17 2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘பயனர் மூலம் வக்ஃப்’ அல்லது ‘பத்திரம் மூலம் வக்ஃப்’ சொத்துக்கள் அடுத்த விசாரணை வரை அறிவிக்கப்படாது என்று மத்திய அரசு உறுதியளித்தது.
இதைத் தொடர்ந்து, வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் தனது நிலைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் வாரியங்களில் எந்த நியமனங்களும் செய்யப்படாது என்று மத்திய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உறுதியளித்தார்.
இந்த உறுதிமொழியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு பதிவு செய்தது. அப்போது, அடுத்த விசாரணை வரை “பத்திரம் மூலம் வக்ஃப்” மற்றும் “பயனர் மூலம் வக்ஃப்” சொத்துக்களை அரசாங்கம் அறிவிக்காது என்று மேத்தா கூறினார்.
இதையடுத்து ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கத் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அடுத்த 7 நாட்களுக்குள் மத்திய அரசு விரிவான பதிலளிக்கவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
5 ரிட் மனுக்கள் மீது இந்த அமர்வு விசாரிக்கும்; 5 மனுக்கள் எவை என்பதை மனுதாரர்களே முடிவுசெய்ய நீதிபதிகள் அறிவுரை கூறினார்கள்.
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, “முந்தைய 1995 சட்டத்தின் கீழ் ஏதேனும் வக்ஃப் சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால், மே 5 ஆம் தேதி அடுத்த விசாரணை வரை அந்த சொத்துக்களை அறிவிக்கையிலிருந்து நீக்க முடியாது” என்றார். இதைத் தொடர்ந்து, புதிதாக திருத்தப்பட்ட வக்ஃப் சட்டத்திற்கு எதிரான மனுக்களுக்கு முதற்கட்ட பதிலைத் தாக்கல் செய்ய மேத்தா ஒரு வார கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 ஐ கொண்டுவந்தது. இந்தத் திருத்தச் சட்டம் ஏப்ரல் 5 அன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




