
டெல்லி ஏப்ரல் 28 2025:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது. பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைப்பதே நீண்ட கால தீர்வாக இருக்கும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,” பாகிஸ்தானை இந்தியா உடைப்பதே நீண்ட கால தீர்வாகும். அதாவது பலுசிஸ்தான், சிந்து, பாக்துனிஸ்தான் மற்றும் எஞ்சிய மேற்கு பஞ்சாப் என பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும். இந்த நான்கையும் பாதுகாக்க இந்திய ஆயுதப் படைகள் தயாராக இருக்க வேண்டும். பலுசிஸ்தான், சிந்து, பாக்துனிஸ்தான் ஆகியவற்றை சுதந்திர நாடுகளாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள மற்றொரு எக்ஸ் பதிவில்,” “இந்தியாவிற்கு பாகிஸ்தானுடன் நிலையான அமைதியை பெற என்ன வழிகள் இருக்கின்றன? தற்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் போன்ற பகுதிகள் கலக்கத்தில் உள்ளன. இந்தியா எதிர்கொள்ள வேண்டியது மீதமுள்ள பாகிஸ்தானையே. அதனால், இந்தியா பாகிஸ்தானை (அல்லது தற்போது உள்ள பாகிஸ்தானின் மீதமுள்ள பகுதிகளை) முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதே வழியாக இருக்கிறது” என கூறியுள்ளார்.




