நம்மாழ்வார் & நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாறு பாடநூலில் சேர்க்கப்பட வேண்டும் – நடிகர் செளந்தரராஜன் கோரிக்கை.


**நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் – தமிழக அரசுக்கு வேண்டுகோள்**
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு, நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆதரவாளர் சௌந்தரராஜா அவர்களின் *”மண்ணுக்கும் மக்களுக்கும்”* அறக்கட்டளை சார்பாக, நம்மாழ்வாரின் 87வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், 11 இயற்கை விவசாயிகளுக்கு *நம்மாழ்வார் விருது* மற்றும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, உசிலம்பட்டி கண்மாய் பகுதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சௌந்தரராஜா நட்ட பனை விதைகள் எத்தனை மரங்களாக வளர்ந்துள்ளன என்பதை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
பின்னர், செய்தியாளர்களுடன் உரையாடிய நடிகர் சௌந்தரராஜா கூறியதாவது:
*”நம்மாழ்வார் பிறந்தநாளை முன்னிட்டு, உசிலம்பட்டி பகுதியில் உள்ள 11 விவசாயிகளை முதன்முறையாகத் தேர்ந்தெடுத்து, எங்கள் அறக்கட்டளை மூலம் விருதும், பணமும் வழங்கி மகிழ்ச்சி அடைகிறேன். இதை என் வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக உணர்கிறேன்.”*

இந்த நிகழ்வில் நம்மாழ்வாரின் நண்பர் மற்றும் நெல் ஜெயராமனின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.
**தமிழக அரசுக்கான கோரிக்கைகள்:**
1. **நம்மாழ்வாருக்கு மணிமண்டபம்** அமைக்கப்பட வேண்டும்.
2. **நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாறு** தமிழக பாடத்திட்டத்தில் (ஒரு பக்கத்தில் குறைந்தபட்சம்) சேர்க்கப்பட வேண்டும்.
*”பருவநிலை மாற்றம் இன்று பெரும் சவால். ஆரோக்கியமான வாழ்வுக்கு விவசாயம் முக்கியம். விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறினாலும், விவசாயி சேற்றில் கால் வைக்காவிட்டால், நாம் சோற்றில் கை வைக்க முடியாது. இயற்கை விவசாயத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வது நமது கடமை. நேர்மையான விவசாயிகளை சமூகமும், அரசாங்கமும் மதிக்க வேண்டும்.”*
*”மரங்களை நடுவதை விட, அவற்றை பராமரிப்பது முக்கியம். அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். இன்று 11 விவசாயிகளுக்கு விருது வழங்கினேன். வருடம் முழுவதும் இதை தொடர விரும்புகிறேன். 15 ஆண்டுகளில் ₹55,000 மட்டுமே தர முடிந்தது. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் சென்று விவசாயிகளை ஆதரிப்பேன்.”*

*”பாடப்புத்தகங்களில் நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமனின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டும். இன்றைய இளம் தலைமுறை விவசாயம் பற்றி மறந்துவிடும் நிலை உள்ளது. இதைத் தடுக்க, அவர்களின் பங்களிப்பு பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்.”*




