
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்திற்குச் சென்றார் பிரதமர் மோடி
பஞ்சாப் மே13.5.2025 :
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
ஆதம்பூர் விமானப்படை தளத்தை தாக்கியதாக பாக். கூறியிருந்த நிலையில் பிரதமர் திடீர் விசிட்.

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்தியா-பாக்., போரில் பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளம் முக்கியப் பங்காற்றியது. இந்த விமானப்படை தளத்தில் இருந்து வீரர்கள் பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர்.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இன்று (மே 13) ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார்.

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானுக்கு அளித்த பதில் தாக்குதல் குறித்து வீரர்கள் விளக்கம் அளித்தனர்.

விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இந்த விமானப்படை தளத்தை தான், பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி அழித்து விட்டதாக முற்றிலும் பொய்யான தகவல்களை பரப்பியது. அதை பொய் என்று நிரூபிக்கும் வகையில், இன்று பிரதமர் மோடியின் பயணம், வீரர்களின் கலந்துரையாடல் அமைந்துள்ளது.

நமது துணிச்சல்மிக்க விமானப்படை போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்த பிரதமர். “துணிச்சல், உறுதிப்பாடு, மற்றும் அச்சமின்மைக்கு காவியமாகத் திகழ்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறந்த அனுபவமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

“இன்று காலை, நான் ஆதம்பூரில் உள்ள விமானப்படை நிலையத்துக்குச் சென்று நமது துணிச்சல்மிக்க விமானப்படை போர் வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களைச் சந்தித்தேன். துணிச்சல், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மைக்கு காவியமாகத் திகழ்பவர்களுடன் இருந்தது மிகவும் சிறந்த அனுபவமாகும். நமது நாட்டிற்காக நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா என்றும் நன்றியுடன் இருக்கும்.” என்று கூறியுள்ளார்.




