
கூட்டணி ஆட்சி என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில், அக்கட்சி எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம் மட்டும் அவையின் உள்ளே இருந்தார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக சார்பில் பேரவையில் அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்ததை கண்டித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது. பாஜகவுடன் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம். கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் அமித்ஷா கூறினார். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்சாவும் கூறவில்லை.
நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்றார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சில தினங்கள் முன் சென்னை வந்த அமித் ஷா, பாஜக – அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தி அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




