
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், வக்ஃப் (திருத்தம்) சட்டம் 2025-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்தச் சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை ஏற்படுத்துவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2025-ஐ ஏப்ரல் 4-ஆம் தேதி மாநிலங்களவை 128 வாக்குகள் ஆதரவாகவும், 95 வாக்குகள் எதிராகவும் நிறைவேற்றியது. முன்னதாக, நீண்ட விவாதத்திற்குப் பிறகு மக்களவையில், 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏப்ரல் 5-ஆம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, அதை ஒரு சட்டமாக்கினார்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் மற்றும் கேரள சன்னி முஸ்லீம்கள் உள்ளிட்ட பலர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025-ஐ ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் தலையீட்டு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இந்தத் திருத்தங்கள் இந்திய அரசியலமைப்பின் திட்டத்திற்கு இசைவானவை என்றும், முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரின் எந்தவொரு உரிமையையும் மீறவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளன.
வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025, வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், தொடர்புடைய பங்குதாரர்களை அதிகாரம் அளித்தல், கணக்கெடுப்பு, பதிவு உள்ளிட்ட அதிகாரங்களை வழங்குகின்றன




