சுவையான ரோட்டு கடை பேல் பூரி.. இப்போ உங்க வீட்டிலேயே பண்ணலாம் !

குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ரோட்டு கடை பேல் பூரி வீட்டிலேயே எப்படி தயார் செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

ரோட்டு கடை பேல் பூரியை வீட்டிலேயே சுலபமாய் செய்யலாம்; சுவையில் சிறிதளவும் மாறுதல் இருக்காது. இதை எப்படி செய்வது தெரியுமா? கீழ்கண்ட வழிமுறைகளை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.
தேவையான பொருட்கள்
அரிசி பொரி- 100 கிராம்
நம்கீன் அல்லது மிக்சர் – ¼கப்
வருத்த வேர்க்கடலை – ¼கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு -1
வெங்காயம்-1
தக்காளி-1
சேவ் – 1கப்
பாப்டி -1கப்
உப்பு – சிறிதளவு
காஷ்மீரி மிளகாய் தூள் – சிறிதளவு
சாட் மசாலா – சிறிதளவு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
புதினா கொத்தமல்லி சட்னி -2 டீஸ்பூன்
புளி பேரிச்சம்பழம் சட்னி -2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
புளி பேரிச்சம்பழம் சட்னி தயாரிக்க
பேரிச்சம்பழம் -10
புளிதண்ணிர் -½ கப்
காஷ்மீரி மிளகாய் -½ டீஸ்பூன்
சீரகத்தூள் -½ டீஸ்பூன்
தனியா தூள் -½ டீ ஸ்பூன்
பிளாக் சால்ட் அல்லது காலா நமக் -½ டீஸ்பூன்
இஞ்சி தூள் -½ டீஸ்பூன்
உப்பு -½ டீஸ்பூன்
வெல்லம் -2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி புதினா சட்னி தயாரிக்க
பச்சை மிளகாய் -2
இஞ்சி -1 துண்டு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
புதினா – ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு – ஒரு டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
புளி பேரீச்சம் பழம் சட்னி தயாரிக்க ஒரு கடாயில் விதை நீக்கிய பேரிச்ச பழத்தை சிறிது துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பேரிச்சம்பழம் வெந்ததும் அதில் புளிக்கரைசல் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள் சீரகத்தூள், தனியா தூள், பிளாக் சால்ட் அல்லது காலா நமக், இஞ்சி தூள், வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக வைத்து இறக்கவும். இவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மை போன்று அரைத்து எடுக்கவும். இப்போது புளி பேரிச்சம்பழம் சட்னி தயார்.
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி இலை, புதினா, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மை போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது கொத்தமல்லி புதினா சட்னி தயார்.
ஒரு கடாயில் அரிசி பொரியை நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் வறுத்த பொரியை சேர்த்து அதனுடன் நம்கீன் அல்லது மிக்சர் சேர்க்கவும். வருத்த வேர்க்கடலை மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் விதைகள் நீக்கி பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் இதனுடன் சேவ், பாப்டி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மேலும் இதனுடன் காரத்துக்கு ஏற்ப சிறிதளவு காஷ்மீரி மிளகாய் தூள், சாட் மசாலா மற்றும் பொடியாக நறுக்கிய ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். பின்னர் இதனுடன் புதினா கொத்தமல்லி சட்னி மற்றும் புளி பேரிச்சம்பழம் சட்னி சேர்க்கவும். சட்னியை சுவைக்கு ஏற்ப கூட்டியோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது சுவையான ரோட்டு கடை பேல் பூரி தயார். பேல் பூரியை தயார் செய்த உடனே பரிமாறி சாப்பிட வேண்டும். இல்லையெனில் அதில் உள்ள மொறு மொறுப்பு போய் சுவை மாறிவிடும். பேல் பூரிக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொண்டால் பேல் பூரியை உடனடியாக செய்து சாப்பிட்ட எளிமையாக இருக்கும்.




