Uncategorized

இளையராஜா எனும் இசைச் சித்தன்- சிம்பொனி ஒரு சிறப்பு பார்வை

சிம்பொனி என்பது மேற்கத்திய இசையின் உச்சம், அதனை ஐரோப்பிய இசை மேதைகளிலே அதை அமைத்தவர்கள் மிக மிக குறைவு, ஏழு பேருக்குள்தான் அமைத்திருக்கின்றார்கள்

ஆசியர்களில் முதன் முறையாக இளையராஜா இச்சாதனையினை இரண்டாம் முறையாக லண்டனில் நிகழ்த்துகின்றார். அந்த சாதனை இந்துவின் சாதனை, இரண்டாம் முறை ஒரு இந்து இந்தியன் அந்த சாதனையினை செய்கின்றார், இது தேச பெருமை. அந்த மாபெரும் இசைமேதை தேசத்திற்கு இரண்டாமுறை பெருமை தேடி தேரும் இந்நேரம் அவருக்காக இந்த சரித்திர சாதனைக்காக ஓவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு இந்துவும் அவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டியது கடமை

சிம்பொனி என்பது 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஒரு மறுமலர்ச்சி எல்லா வடிவிலும் தோன்றியபோது, ஓவியம் இசை தொழில் நாகரீக வாழ்வு சிந்தனை என எல்லா வகையிலும் ஒரு எழுச்சி இந்த பிரபஞ்சத்தால் கொடுக்கபட்ட நேரம் உருவான இசை கோர்வை. யூதர்கள் அதற்கு பெரும் பங்களிப்பினை கொடுத்தார்கள். இந்த இசைவடிவத்தின் நிபந்தனை அல்லது நெறிமுறைகள் வித்தியாசனமானவை

ஒரு நாடகம் அல்லது தொடர்காட்சியினை இசையால் மக்களை உணரவைக்க வேண்டும், அதாவது ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்களை வார்த்தைகளால் அல்லாமல் இசையால் உணரவைத்தால் எப்படி இருக்கும்.. இது அப்படியானது !

இங்கு இன்னொரு முக்கிய நிபந்தனை எல்லாவகை இசைகருவிகள் அதாவது நரம்பு கருவிகள், தோல் கருவிகள், மரங்களில் செய்யபட்டு மூச்சினால் காற்றால் இயக்கபடும் கருவிகள் என எல்லா வகை இசை கருவிகளும் பயன்பட வேண்டும். இங்கே சவால் என்ன என்றால் இசை அமைப்பாளர் மனதால் உருவாக்கும் இசையினை எந்த இடத்தில் எந்த இசை எப்படி இசைக்கபடவேண்டும் எனும் குறிப்பினை மட்டும் ஒவ்வொரு வாத்தியகாரனுக்கும் கொடுக்க வேண்டும்

எக்காரணம் கொண்டும் ரிகர்சல் எனும் ஒத்திகை முறை கிடையாது. அரங்கினுள் எல்லா வாத்தியக்காரனும் வந்தபின் இசை அமைப்பாளர் தன் அறிவிப்பு மூலம் கைகளை அசைத்து இந்த இசையினை மிக கவனமாக மிக கோர்வைகாக ஒவ்வொரு வாத்தியகாரனிடம் இருந்தும் கொண்டுவர வேண்டும். 100க்கும் மேற்பட்டோர் வாத்தியத்துடன் அமர்ந்திருக்கும் நேரம் ஒத்திகை இன்றி உருக்கமான இசையினை கண்முன் ஒரு காவியத்துக்கு கொண்டுவர வேண்டும் ,அதுவும் எல்லா வாத்தியமும் கலந்து கொண்டுவர வேண்டும் என்றால் அது மகா கடினம்

யாரால் முடியும் இந்த வித்தை? இது பிறவி சாதனையாளர்களால் மட்டுமே முடியும்

பீத்தோவன் எனும் யூத இசையமைப்பாளன் இதனை 7 முறை செய்தான். நெப்போலியனின் எழுச்சியினை அவன் முடிசூட்டியதை இந்த சிம்பொனி இசையில் அவன் உணர்ச்சிபூர்வமாக கொடுத்தது எக்காலமும் முதலிடம் என கொண்டாடபடுகின்றது

ஆனால் அதே பீத்தோவன் ரஷ்யாவில் நெப்போலியன் நுழைந்தபோது தன் சிம்பொனியினை கிழித்துபோட்டு தன் எதிர்ப்பை காட்டினான், அதெல்லாம் வரலாறு

அவனை போல வெகுசிலர்தான் அங்கு சாதித்திருக்கின்றார்கள்

இம்முறை இளையராஜா “வாலியன்ட்” எனும் தலைப்பில் இந்த் சிம்பொனி இசைக்கின்றார், முன்பு அவரின் இசை திருவாசகத்தை மனதில் இசையாக காட்டுவது போல் இருந்தது அதனால் அது உரிய கவனம் பெறாமல் மறைக்கபட்டது

ஆனால் சிம்பொனி இசைவடிவினை வெற்றிகரமாக அவர் சாதித்தார் என்பதை இசை உலகம் குறித்து கொண்டது

இப்போது இளையராஜா இரண்டாம் முறை அந்த சிம்பொனியினை இசைக்க செல்கின்றார்

இளையராஜா சினிமாவுக்கு பின்னணி இசை அமைத்தவர், அவரின் பின்னணி இசை எப்படி என்பதை முதல்மரியாதை, நாயகன், தளபதி என பல படங்களை ஓசையின்றி அதாவது மியூட் செய்துவிட்டு பாருங்கள் புரியும்

சுமார் ஆயிரம் படங்களுக்கு மேல் அவர் இசை அமைத்தவர் என்பதால் இது அவருக்கு எளிது, ஆனால் ஆசியாவில் ஏன் ஐரோப்பாவில் கூட இப்போது இந்த சிம்பொனி சவாலை அவரைவிட்டால் தொட ஆளில்லை என்பதில் தெரிகின்றது அவரின் இசை சித்த நிலை

ஒரு இசைமேதை என அவர் இதை செய்வதில் வியப்பில்லை என்றாலும் ஆழ கவனியுங்கள் ஒன்று புரியும் அது அதிசயிக்க வைக்கும். அவருக்கு வயது 82, இந்த முதிர்ந்த வயதில் அவர் இழந்துவிட்டது அதிகம், உடன்பிறந்தோர் இருவர் இல்லை, நண்பர் குழாமில் பாலசுப்பிரமணியம், மலேசிய வாசுதேவன் என யாருமில்லை. . மனைவி இல்லை, மகனோடு முறுகல் ஒரு மகனும் பிரகாசிக்கவில்லை, தம்பியோடும் உறவு சுமூகமில்லை.. அவர் உயிராய் நினைந்த மகள் இப்போது இல்லை, அவர் தன் ஆலயமாய் தொழுத பழைய ஸ்டூடியோ இல்லை.. இளையராஜா என்ன பெற்றார் என்பதை விட தனிபட்ட வகையில் அவர் இழந்தது அதிகம்

எத்தனையோ இசை அமைப்பாளர்களை கண்ட தேசம் இது குறிப்பாக தமிழகம் பலரை கண்டது, ஒன்று பொருள் கிடைத்தவுடன் ஓய்வார்கள், இல்லை குடும்பம் முன்னேறியவுடன் அமைதியாவார்கள். இல்லை 60 வயதில் இது போதும் என நின்றுவிடுவார்கள். சிலர் தங்களுக்கான குழு தன் நண்பர்கள் சென்றவுடன் நிறுத்துவார்கள்

ஆனால் தன் சொந்தம் பந்தம், நட்பு, பிள்ளை , குடும்பம் என எல்லாமும் இழந்தபின்பும் முதிர்ந்த வயதில் இவ்வளவு பெரிய சாதனையினை அவரால் செய்யமுடிகின்றது என்றால் அவருக்கு இசை என்பது கர்மா, இசை என்பது அவரின் சுவாசம். இசை தவிர அம்மனிதன் ஏதும் உணர்ந்ததில்லை அதை தவிர ஏதும் அறியவில்லை , இசையினை தன் கர்மாவாக கொண்டு தன் கடைசி மூச்சுவரை இசை ஒன்றுக்காக வாழ்வேன், எந்த இழப்பும் எந்த பாசபந்தமும் எந்த புகழும் எந்த பணமும் என்னை கட்டுபடுத்தாது

என் இசையினை என்னை என் உழைப்பை என் கர்மாவினை கட்டுபடுத்தும் சக்தி காலத்தை தவிர யாருக்குமில்லை, என கர்மத்தை செய்வதை வேறு எந்த சூழலும் கட்டுபடுத்தாது, என் மூச்சு உள்ளவரை என் கர்மம் தொடரும் என நிற்கும் அந்த மனமே சித்தர் கோலம்

நிச்சயம் அம்மனிதன் சித்தன், தன் கர்மத்தை பாசபந்தங்களில் தொலைக்காமல் பணம் புகழில் தொலைக்காமல் வீண் ஆரவாரத்தில் தொலைக்காமல் தாமரை இலையில் நீர்போல் ஒட்டாமல் செய்யும் மகா சித்தன். இளையராஜாவின் இசையினை விட அவர் வாழ்வினை விட இந்த வைராக்கியம் இந்த மனம் ,இந்த மனதிடம் ஒவ்வொருவரும் கற்றுகொள்ள வேண்டிய ஒன்று. எந்த கலைஞன் ஆன்மீகத்தில் பக்தியில் கரைவானோ அவனாலோ உச்சத்தை தொடமுடியும்.. அதை யூதர்கள் செய்தனர், இதோ ஒரு பரிபூரண இந்து நம் கண்முன் செய்கின்றான், நாம் பாக்கியசாலிகள்.. வள்ளுவனோ கம்பனோ வள்ளுவனோ அற்புதமான பாடல்களை ஏழு ஸ்வரங்களுக்குள் கொடுத்தார்கள்.. உண்மையில் அவைதான் கீர்த்தனைகள், அவைதான் பக்தி பாடல்கள், தேவாரம் திருவாசகமெல்லாம் அவ்வகையே !

பின்னாளி, தியாகராஜ பாகவதரின் கீர்த்தனைகள் எப்படி இசைகட்டுக்குள் வருமோ அப்படித்தான் தமிழ் இலக்கிய பக்திபாடல்களும் வரும்

ஆனால் அதை இளையராஜா மட்டும் திருவாசகத்தில் முயற்சித்தார், இந்நாட்டில் இந்து மதம் அரசமதமாக இருந்து இந்து அறநிலையதுறை பூரண இந்துமயமாக இருந்திருந்தால் ஏகபட்ட தேவாரங்களை கீர்த்தனைகள் போல் தமிழகம் கண்டிருக்கும், ஆனால் இன்னும் உரிய காலம் வரவில்லை

அப்படி இசையே தமிழாக இசையே பக்தியாக கொண்ட சமூகம் இது

நாம் திருநீலநக்க நாயனார் வாழ்வு முதல் கையில் தாளமிட்ட சம்பந்தபெருமான் வரை அதனை கண்முன் காட்டிய மதம் இது

அந்த மதத்தில் அந்த பழைய நாயன்மார்கள், பழைய இந்து இசைமேதைகள் ஆழ்வார்கள் அடியார்கள் வரிசையில் இன்று நம்முன் நிற்பவர் இளையராஜா

இன்று லண்டனில் சாதிக்க இருப்பது இந்துக்களின் இசை, இந்த மண்ணில் ஒரு காலத்தில் ஒவ்வொரு இந்து ஆலயங்களிலும் தங்கள் ஆத்மாவில் இருந்து இந்து ஞானியர்கள் எழுப்பிய அந்த இசை

இளையராஜா என்பவர் தனிபட்ட மனிதர் அல்ல, அவர் மனமும் தனிமனம் அல்ல‌

இந்த மண்ணின் பழைய மாபெரும் இசை சமூகம் ஒன்று, ஆலவாய் நாதன் சன்னதியிலும் தியாராஜர் சனனதியிலும் திருவரங்கன் சன்னதியிலும் கதறிகதறி அழுத அந்த மாபெரும் இசைதாத்பரியத்தின் வடிவம்

அது அன்றி பண்ணைபுரத்தில் பிறந்த சமானியன் இவ்வளவு பெரிய இடத்தை தமிழகத்திலும் காசியிலும் லண்டனிலும் பெற்றிருக்க முடியாது

அந்த இசை சித்தன் தன் கர்மாவினை உலகம் திரும்பி பார்க்க செய்யும்படி செய்துவிட்டு வர வாழ்த்துவோம், பிரார்த்திப்போம்

இந்திய அரசு இதனை கவனிக்கட்டும், இதே இசை கோர்வையினை இந்திய சுதந்திர போராட்ட காட்சிகளுக்கும், வீரசிவாஜி போன்றோரின் வரலாற்றுக்கும், இந்த தேசம் கண்ட மாபெரும் போராட்டத்துக்குமாய் இளையராஜா வெளிகொணர வழி செய்யட்டும்

தேசம் கண்ட ஒவ்வொரு வலியும் அவரால் இசைவடிவில் வரட்டும், சோமநாதபுரி முதல் மதுரை வரை ஒவ்வொரு இந்து ஆலயமும் வீழ்ந்து எழுந்த வரலாறு அவனால் இசைவடிவில் நிலைக்கட்டும்

அந்த மனிதன் இன்று பெருவெற்றி பெறவும், பீத்தோவனின் சிம்பொனி சாதனையினை உடைக்குளவு அடுத்தடுத்து சாதிக்கவும் அவன் வணங்கும் தாய் மூகாம்பிகை போன்ற தெய்வங்களும், திருவண்ணாமலை சிவபெருமானும், ரமணரும், மாயம்மாவும், யோசிராம் சுரத்குமார் போன்ற பெரும் சித்தர்களும் பெரும் அருள் புரியட்டும்

பீத்தோவன் மூன்றாம் முறை சிம்பொனி செய்தபோது அவனுக்கு காதுகேட்காது, ஆம் அவன் இசையினை அவனைதவிர எல்லோரும் கேட்பார்கள்

அவன் மக்களின் அசைவுகளை கண்டே மனம் கலங்கி பியாணோ மேல் விழுந்து அழுவான், ஆனாலும் அடுத்தடுத்து தயாரகி வருவான்

இன்று பெரும் கரகோஷத்தை தன் மகள் நினைவில் அந்த இளையாராஜா பீத்தோவனின் காது போல் உணரகூடும், ஆனால் அதெல்லாம் அதையெல்லாம் தாண்டி அவர் வருவார்

இந்திய தேசத்தின் இசைஞான பரம்பரையின் வடிவமாக இந்துக்களின் இசை உலகின் எந்த இசைக்கும் சளைத்ததல்ல என அவன் நிருபிக்கும் நேரம் ஒவ்வொரு இந்துவும் ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி பிரார்த்திப்போம்

அன்னை மூகாம்பிகை அவன் மனதில் இருந்து நடத்தட்டும், திருவாசகம் தந்த பெருமகன் அவனுக்கு எல்லாமும் நடத்தி கொடுக்கட்டும், தேசம் பெரும் பெருமை பெறட்டும்

“ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே

அலை மாமகள் நீ கலை மாமகள் நீ
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தே துவழும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ…

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ

சக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ”

என எந்த தாயினை அவன் எழுதி பாடிபாடி துதித்தானோ அவள் தன் அரும்மகனை தன் கலைமகனை உலக‌ இசைக்கோர் திருமகனாக்கி, இசை சித்தனாக்கி இந்த தேசத்துக்கு பெருமையுடன் அழைத்து வரட்டும்

ஜகம் நீ, ஜகம் நீ என தன்னை துதித்த தன் மகன் ஜெகத்தினை வென்றுவர அவளே பரிபூரணியாய் முன் நிற்கட்டும்-

நன்றி: பிரம்மரிஷியார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button