
‛‛பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். அவர் காஷ்மீரில் அமைதியை நிச்சயம் கொண்டு வருவார் என மும்பையில் நடைபெற்ற விழாவில் நடிகர் ரஜினிகாந்த் முழங்கினார்.
மும்பை மே1 2025:

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் WAVES உச்சி மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு மொத்தம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. ‘வேவ்ஸ்’ உலக ஆடியோ விஷூவல் பொழுதுபோக்கு மாநாடு என்பது மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் லிபரப்பு துறை சார்பில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநாட்டில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால்,, ஹேமமாலினி, சிரஞ்சீவி, அக்ஷய்குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் தொழில்துறைத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் தாக்குதல் பற்றியும், அதனை பிரதமர் மோடி கையாள்வது பற்றியும் கருத்து தெரிவித்தார்.அப்போது பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். பிரதமர் மோடி மீண்டும் காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவார் என்று ரஜினிகாந்த் கூறினார்.
தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், WAVES மாநாட்டை அரசு தள்ளிவைக்கும் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். தற்போதைய சமயத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தினால் தேவையில்லாத விமர்சனங்கள் வரும் என்பதால் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று கூறினார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்தேன். பிரதமர் மோடியின் மீதான நம்பிக்கையால் குறித்த நாளில் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்று உறுதியாக நம்பினேன். இப்போது நடந்து விட்டது.

பிரதமர் மோடி ஒரு போராளி. அவரால் எந்த சவால்களையும் எதிர்கொள்ள முடியும். இதனை அவர் ஏற்கனவே நிரூபித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக நாம் அவரை பார்த்து கொண்டே இருக்கிறோம். காஷ்மீர் தாக்குதலை அவர் தைரியமாகவும், அழகாகவும் கையாள்வார். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது காட்டுமிராண்டித்தனமானது. இரக்கமற்றது. காஷ்மீரில் அமைதியை கொண்டு வந்து நாட்டின் புகழ்பெற வைப்பார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதின் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறினார்.




