ஏ.ஆர். ரஹ்மான் உடல்நிலை குறித்து அவரது மகன் அவசர விளக்கம்

நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவே ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது மகன் அமீன் செய்தி வெளியிட்டுள்ளார். ரஹ்மான் தற்போது நலமாக இருப்பதாகவும், மேலும் அவர் தற்பொழுது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார்.

இன்று காலை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தகல்கள் வெளியாகின. இந்த நிலையில் அவரது மகன் அமீன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு நீர்ச்சத்து குறைபாடு காரணமாக ஏற்பட்ட பலவீனம்தான் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். மேலும் மருத்துவமனையிலிருந்து தற்பொழுது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ரஹ்மானின் மகள் ரஹீமாவும் அதே செய்தியை வெளியிட்டார்.
விரிவாக படியுங்கள்.. மருத்துவமனையில் ஏ.ஆர்.ரஹ்மான்.. உடல்நிலை குறித்து விசாரித்தார் முதல்வர் !
இன்ஸ்டாகிராமில், ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீன், “எங்கள் அன்பான ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்கு நான் மனமார்ந்த நன்றி கூறுகிறேன். என் தந்தை நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சற்று பலவீனமாக உணர்ந்தார், எனவே நாங்கள் தொடர்ந்து சில வழக்கமான சோதனைகளைச் செய்தோம், ஆனால் அவர் இப்போது நன்றாக இருக்கிறார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.” “உங்கள் அன்பான வார்த்தைகளும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அக்கறையையும் தொடர்ச்சியான ஆதரவையும் நாங்கள் உண்மையிலேயே பாராட்டுகிறோம். உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் நன்றியும்!” என்று பதிவு செய்துள்ளார். பின்னர், அவரது சகோதரி ரஹீமாவும் அதே செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.



