
சென்னை: தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து நாளை மார்ச் 22-ம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அந்த வீடியோவில் முதல்வர் கூறியிருப்பதாவது: தொகுதி மறுவரையறை தற்போதைய முக்கிய விவாதமாக மாறியுள்ளது. 2026-ல் தொகுதி மறுவரையறை கட்டாயம் நடைபெறும். அப்போது மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். இதனால் நமது மாநிலத்தின் உரிமை பாதிக்கப்படும்.
அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் கூட்டம் நடத்தினோம். பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைவரும் நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். மேலும், பாதிக்கப்படக்கூடிய மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராட முடிவு செய்தோம்.

இதற்காக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய 7 மாநில முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள எல்லா கட்சித்தலைவர்களுக்கும் நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி. அடங்கிய குழு நேரில் சந்தித்து விளக்கம் அளித்தனர். நானும் தொலைபேசி மூலமாகப் பேசியேன். சிலர் நேரில் வர ஒப்புக்கொண்டனர்; சிலர் பிரதிநிதிகளை அனுப்புவதாகக் கூறினர்.
முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னையில் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தால் தமிழ்நாடும் நாம் அழைத்த மாநிலங்களும் பாதிக்கப்படுமானால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான மதிப்பு இருக்காது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியில் சிறப்பாக பங்களித்த மாநிலங்களுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்பதே இந்த கூட்டத்தின் நோக்கம்.
கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நியாயமான கோரிக்கைகள் வெற்றி பெறும். இது இந்தியாவைக் காக்கும்.
முந்தைய நாளில், மக்கள் தொகை மறுவரையறை தொடர்பாக திமுக எம்.பி.க்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட்களை அணிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்று போராட்டம் நடத்தினர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.




