இது ஆரம்பம்தான்'- சிம்பொனி முடித்து நாடு திரும்பினார் இளையராஜா

சென்னை: “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்” என்று சிம்பொனி அரங்கேற்றம் முடித்து திரும்பிய இளையராஜா தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நேற்று அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்துள்ளார்.
இளையராஜா, தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்பது அவரது நீண்டகால கனவாக இருந்தது. ஒரே நேரத்தில் பல்வேறு இசைக்கருவிகளை ஒன்றிணைத்து உணர்ச்சி ததும்ப தரும் இசைதான் சிம்பொனி. அதன் தொடக்கமாக கடந்த 1986-ல் ‘ஹவ் டு நேம் இட்’ என்ற இசை ஆல்பத்தை அவர் உருவாக்கினார்.
இந்த நிலையில் லண்டன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் இளையராஜா. அவருக்கு விமான நிலையத்தில்உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். மேலும் பாஜக, விசிக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “82 வயசாகிடுச்சே இனிமே என்ன பண்ணப்போகிறார் என நினைத்து விடாதீர்கள்.. இது ஆரம்பம்தான்.. லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன்… சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருக்கவும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க.. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்தியா – பிரதமர் வாழ்த்து !




