தற்கொலைதான் செய்து கொண்டாரா நடிகர் சுஷாந்த் சிங் ? இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது சிபிஐ. அதில், சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது திறமையான நடிப்பால் பலரையும் ஈர்த்தவர். ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அவர், 2020 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டாலும், போதைப் பொருள் தொடர்பு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாகவும் செய்திகள் வெளியாயின. ஆனால், சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, நடிகை மற்றும் அவரது காதலியான ரியா சக்கரவர்த்தியின்மீது பாட்னாவில் வழக்கு தொடர்ந்தார். அதற்குப் பதிலாக, ரியாவும் சுஷாந்தின் சகோதரிமீது வழக்கு பதிவு செய்தார். இந்த விவகாரத்தை இந்தியாவின் மத்திய விசாரணை அமைப்பு (CBI) விசாரித்து வந்தது.

சமீபத்தில், இந்த வழக்கில் இறுதி அறிக்கையை CBI சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், சுஷாந்த் சிங் மரணம் கொலை என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும், அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகை ரியா சக்கரவர்த்திக்கு இந்த மரணத்தில் எந்த தொடர்பும் இல்லை என்றும், சமூக வலைதளங்களில் இதுகுறித்து பரவிய தகவல்கள் தவறானவை என்றும் CBI தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




