உலகம்
Trending

மியான்மர் நிலநடுக்கம்: 694 பேர் உயிரிழப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்

மாண்டலே, மார்ச் 29:
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் நேற்று (மார்ச் 28) ஒரு பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ச்சிக்குள்ளானது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் பல்வேறு பகுதிகளை அழித்துக் கொண்டோடி, நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்டது.

நிலநடுக்கம் மற்றும் அதிர்வுகள்

மியான்மரின் மோனிவா நகருக்கு அருகே காலை 11.50 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த 10 நிமிடத்தில் 6.8 ரிக்டர் அளவிலான இரண்டாவது அதிர்வும் ஏற்பட்டு, மியான்மரின் பல நகரங்களை நிலை குலையச் செய்தது. மொத்தம் 4 முறை லேசான அதிர்வுகள் உணரப்பட்டன.

இதன் காரணமாக மியான்மரின் மண்டலே, சாகாயிங், மற்றும் யாங்கோன் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள், மசூதிகள், பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

பாதிப்பு நிலவரம்

அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை தற்போது 694 என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 1,600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டலாம் என அச்சம் எழுந்துள்ளது.

மியான்மர் கடந்து வரும் சவால்கள்

இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா, மற்றும் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளிலும் உணரப்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் இதை உறுதி செய்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் அதிகமான அளவில் மருத்துவ உதவிகள் தேவைப்படுகிறது. குறிப்பாக, ரத்த வங்கியில் போதுமான அளவு ரத்தம் இல்லாததால் சிகிச்சை வழங்க சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் ஆதரவு

மியான்மர் மக்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியா 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ் இந்த பேரழிவுக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரணம் வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் மியான்மர் அரசியாளர்களுடன் பேசி, தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

மியான்மரில் முன்னதாக இருந்த அரசுகள் வெளிநாட்டு நிதியுதவிகளை பெறுவதில் தயக்கம் காட்டியிருந்தாலும், தற்போதைய அதிபர் மின் ஆங் ஹ்ளெய்ங் தலைமையிலான அரசு, உலக நாடுகளிடமிருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்

மியான்மரில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 6 முக்கிய பகுதிகளில் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் நாளும், இரவும் போராடி வருகின்றன.

இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருவதால், பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button