பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான செயல்முறை இப்போது மிகவும் எளிமையாகிறது: இபிஎஃப் நிர்வாகம் புதிய அறிவிப்பு!

பிஃஎப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது, செக் லீஃப் அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் புகைப்படங்களை இனி பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என இபிஎப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சோதனையில் உள்ள இம்முறை, வெற்றிகரமாக உள்ளதால், அதை முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், UAN எண்ணுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கு வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் 36 ஆயிரம் பேர் வரை வங்கி கணக்கை இணைக்க கோரிக்கை வைப்பதாகவும், அந்த கோரிக்கை நிறைவேற 3 நாட்களுக்கு மேல் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக்கும் வகையில், புதிய நடைமுறை கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஊழியர்கள் மட்டுமின்றி, வேலை பார்க்கும் நிறுவனங்களும் பயன் பெறுவர் என EPF நிறுவனம் தெரிவித்துள்ளது.




