கேரளாவில் 8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள விழிஞ்ஞம்துறைமுகம் – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

கேரளாவில் உள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பின்னோக்கு துறைமுகம், இந்தியாவின் கடல்சார் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்
புதுடெல்லி மே 2 2025

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று ரூ.8,800 கோடி மதிப்புள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் பன்னோக்கு துறைமுகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பகவான் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்று ஆண்டுகளுக்கு முன், செப்டம்பரில், ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த இடத்திற்குச் செல்லும் பாக்கியம் தனக்குக் கிடைத்ததை எடுத்துரைத்தார். தனது நாடாளுமன்றத் தொகுதியான காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிரமாண்டமான சிலை நிறுவப்பட்டது பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தச் சிலை ஆதி சங்கராச்சாரியாரின் மகத்தான ஆன்மீக ஞானம் மற்றும் போதனைகளுக்கு புகழ் சேர்ப்பதாக அவர் கூறினார். உத்தராகண்டில் உள்ள புனித கேதார்நாத் ஆலயத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் தெய்வீக சிலையைத் திறந்து வைக்கும் பெருமையும் தனக்குக் கிடைத்ததை அவர் நினைவுகூர்ந்தார். கேதார்நாத் கோயிலின் கதவுகள் இன்று பக்தர்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு நிகழ்வாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கராச்சாரியார், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மடங்களை நிறுவி, நாட்டின் மனசாட்சியை விழிப்படையச் செய்தார் என்பதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். ஒன்றுபட்ட, ஆன்மீக ரீதியில் ஒளி பெற்ற பாரதத்திற்கு அவரது முயற்சிகள் அடித்தளம் அமைத்தன என்பதை பிரதமர் எடுத்துரைத்தார்.
மகத்தான சாத்தியக்கூறுகள் நிறைந்த பரந்த பெருங்கடல் ஒருபுறம் இருப்பதையும், மறுபுறம் இயற்கையின் வியத்தகு அழகு அதன் பிரம்மாண்டத்தை மேலும் கூட்டுவதையும் திரு மோடி எடுத்துரைத்தார். இவை அனைத்திற்கும் மத்தியில், விழிஞ்ஞம் ஆழ்கடல் துறைமுகம் இப்போது புதிய யுக வளர்ச்சியின் அடையாளமாக உருவெடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனைக்காக கேரள மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் தனது வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
விழிஞ்ஞம் ஆழ்கடல் துறைமுகம் ரூ. 8,800 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், வரும் ஆண்டுகளில் இந்தக் கப்பல் போக்குவரத்து மையத்தின் திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும், இதனால் உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் சிலவற்றின் சுமூகமான வருகை சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் கப்பல் போக்குவரத்தில் 75% முன்னர் வெளிநாட்டு துறைமுகங்கள் மூலம் நடத்தப்பட்டன என்பதையும், இதனால் நாட்டிற்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை இப்போது மாற உள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், இந்தியாவின் பணம் இனி இந்தியாவுக்கு பயன்படும் என்றும், ஒரு காலத்தில் நாட்டிற்கு வெளியே சென்ற நிதி இனி கேரளா மற்றும் விழிஞ்ஞம் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.

காலனித்துவ ஆட்சிக்கு முன், இந்தியா பல நூற்றாண்டுகள் செழிப்புடன் இருந்தது என்று குறிப்பிட்ட திரு மோடி, ஒரு கட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா முக்கிய பங்கினைக் கொண்டிருந்தது என்பதை எடுத்துரைத்தார். அந்தக் காலத்தில் இந்தியாவை மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுத்தியது அதன் கடல்சார் திறன் மற்றும் அதன் துறைமுக நகரங்களின் பொருளாதார செயல்பாடுதான் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தக் கடல்சார் வலிமையிலும் பொருளாதார வளர்ச்சியிலும் கேரளா குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருந்தது என்று கூறிய அவர், கடல்சார் வர்த்தகத்தில் கேரளாவின் வரலாற்றுப் பங்கினை எடுத்துரைத்தார். அரபிக் கடல் வழியாக, இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக தொடர்புகளைப் பேணி வந்தது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கேரளாவைச் சேர்ந்த கப்பல்கள் பல்வேறு நாடுகளுக்கு பொருட்களை எடுத்துச் சென்றன. இது உலகளாவிய வர்த்தகத்திற்கு ஒரு முக்கிய மையமாக மாறியது என்று அவர் குறிப்பிட்டார். “இன்று, இந்தப் பொருளாதார சக்தியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “இந்தியாவின் கடலோர மாநிலங்களும் துறைமுக நகரங்களும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய மையங்களாக மாறும்” என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
“உள்கட்டமைப்பும், வணிகம் செய்வதை எளிதாக்குவதும் ஊக்குவிக்கப்படும்போது துறைமுகப் பொருளாதாரம் அதன் முழு திறனை அடைகிறது” என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில், இதுவே மத்திய அரசின் துறைமுகம் மற்றும் நீர்வழிப் பாதைகள் கொள்கையின் வரைபடமாக இருந்து வருகிறது. தொழில்துறை நடவடிக்கைகள் மற்றும் மாநிலங்களின் முழுமையான வளர்ச்சி முயற்சிகளை அரசு துரிதப்படுத்தியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சாகர்மாலா திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மாநிலஅரசுகளுடன் இணைந்து, துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்தி, துறைமுக இணைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பிரதமரின் விரைவு சக்தி திட்டத்தின் கீழ், நீர்வழிப்பாதைகள், ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் விமானப் பாதைகள் தடையற்ற இணைப்புக்காக விரைந்து ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். வணிகம் செய்வதை எளிதாக்குவதில் இந்த சீர்திருத்தங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் அதிக முதலீட்டிற்கு வழிவகுத்துள்ளன என்றும் அவர் கூறினார். இந்திய கடற்படையினர் தொடர்பான விதிமுறைகளையும் மத்திய அரசு சீர்திருத்தியுள்ளது, இது குறிப்பிடத்தக்க பலனைத் தந்துள்ளது என்று பிரதமர் கூறினார்.
2014-ம் ஆண்டில், இந்திய கடற்படையினரின் எண்ணிக்கை 1.25 லட்சத்திற்கும் குறைவாக இருந்தது என்றும் இன்று, இந்த எண்ணிக்கை 3.25 லட்சத்தைத் தாண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கடற்படையினர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்தியா இப்போது உலகளவில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தசாப்தத்திற்கு முன், கப்பல்கள் துறைமுகங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது, இதனால் சரக்குகளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டது என்பதை எடுத்துரைத்த திரு மோடி, இந்த மந்தநிலை, வணிகங்கள், தொழில்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதித்தது என்று குறிப்பிட்டார். நிலைமை இப்போது மாறிவிட்டது என்றும், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள் கப்பல் திரும்பி செல்லும் நேரத்தை 30% குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தியுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேம்பட்ட துறைமுக செயல்திறன் காரணமாக, இந்தியா இப்போது குறுகிய காலத்தில் அதிக அளவு சரக்குகளைக் கையாளுகிறது, நாட்டின் சரக்குப் போக்குவரத்து மற்றும் வர்த்தக திறன்களை வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்தியாவின் கடல்சார் வெற்றி ஒரு தசாப்த கால தொலைநோக்கு மற்றும் முயற்சியின் விளைவாகும்” என்று பிரதமர் கூறினார், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது துறைமுகங்களின் திறனை இரட்டிப்பாக்கி, அதன் தேசிய நீர்வழிகளை எட்டு மடங்கு விரிவுபடுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இன்று, உலகின் முதல் 30 துறைமுகங்களில் இரண்டு இந்திய துறைமுகங்கள் உள்ளன என்றும், தளவாட செயல்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையும் மேம்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, உலக கப்பல் கட்டுமானத்தில் முதல் 20 நாடுகளில் இந்தியா இப்போது உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்பை வலுப்படுத்திய பிறகு, உலக வர்த்தகத்தில் இந்தியாவின் நிலையை நோக்கி கவனம் இப்போது திரும்பியுள்ளது என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய இந்தியாவின் கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்கு திட்டத்தை அவர் அறிவித்தார். இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார பெருவழித்தடத்தை நிறுவ இந்தியா பல முக்கிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஜி-20 உச்சிமாநாட்டை அவர் நினைவு கூர்ந்தார், இந்த வழித்தடத்தில் கேரளாவின் முக்கிய பங்கை எடுத்துரைத்த அவர், இந்த முயற்சியால் மாநிலம் பெரிதும் பயனடையும் என்று கூறினார்.

இந்தியாவின் கடல்சார் தொழிலை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்வதில், தனியார் துறையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய திரு. மோடி, பொது-தனியார் கூட்டாண்மைகளின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் துறைமுகங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தியது மட்டுமல்லாமல், அவற்றை எதிர்காலத்திற்குத் தயாராகவும் ஆக்கியுள்ளது என்று அவர் கூறினார். தனியார் துறை பங்கேற்பு புதுமை மற்றும் மேம்பட்ட செயல்திறனை உந்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
கொச்சியில் கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்க்கும் குழுமத்தை நிறுவுவதை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் தெரிவித்தார். இந்தக் குழுமம் நிறைவடைந்தவுடன், ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இது கேரளாவின் உள்ளூர் திறமையாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வளர்ச்சிக்கான தளத்தை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.




