நீட் தேர்வு விவகாரம்: அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு – அமித்ஷா உறுதி…

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
நேற்றிரவு 11:30 மணியளவில் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவையடுத்து, தமிழிசை சௌந்தரராஜனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் குமரி அனந்தனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இல்லத்தில் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார்

.
அப்போது பேசிய அவர்,
டாஸ்மாக், மணல் ஊழல்கள் குறித்து தேர்தலில் மக்களுக்கு திமுக பதில் சொல்ல வேண்டும். போக்குவரத்து, மின்சாரம், இலவச வேட்டி சேலை உள்ளிட்ட ஊழல்கள் குறித்து பதில் சொல்ல வேண்டும். ஆட்சியில் இருக்கின்ற பிரச்னைகளை திசைதிருப்ப திமுக மும்மொழிக்கொள்கை குறித்து பேசி வருகிறது.

மக்களின் கவனத்தை மடைமாற்றவே நீட் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். தமிழ் மக்களை, தமிழகத்தை, தமிழ்மொழியை நாங்கள் கௌரவமாகக் கருதுகிறோம்.
நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம், காசி தமிழ்ச் சங்கமம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா?. பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் படிக்கிறார்கள். தமிழில் பாட நூல்களை மாற்ற 3 ஆண்டுகளாக வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் அவர் கூறினார்.




