
வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வரவேற்கத்தக்கது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.

April 17, 2025 at 18:09 pm
சென்னை ஏப்ரல் 17 205: வக்ஃபு திருத்த சட்டம் தொடர்பான, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடிகர் விஜய் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதளத்தில் விடுத்துள்ள பதிவில், “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து நடிகர் விஜய், “இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன். தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி அவர்களுக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.




