
சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுவதாக துணை ஜனாதிபதி தன்கர் கூறியுள்ளார்.

புதுடெல்லி, டெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவை தொடர்பான நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:-
நாடாளுமன்றம் ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பை எழுத முடியாது. நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றவும், நீதித்துறை மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைக்கவும் மட்டுமே முடியும்.தீர்ப்பு எழுதுதல், நீதி வழங்குதல் ஆகியவை நீதித்துறையின் ஒரே உரிமையாகும், அதேபோல் சட்டமியற்றுதல் நாடாளுமன்றத்தின் உரிமையாகும்.
ஆனால், அடிக்கடி நிர்வாக ஆளுமை நீதித்துறை உத்தரவுகளால் நடைபெறுவதைப் பார்க்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, பாராளுமன்றத்திற்கு பொறுப்பாகும். தேர்தல் மூலம் அரசு என்பது மக்களுக்கு பொறுப்பாகும். இதில் பொறுப்புக்கூறல் என்ற கொள்கை இயங்குகிறது. பாராளுமன்றத்தில் கேள்விகள், விமர்சனக் கேள்விகள் கேட்கலாம், ஏனெனில் ஆளுமை நிர்வாகத்தால் நடைபெறுகிறது.

ஆனால், இந்த நிர்வாக ஆளுமை நீதித்துறையால் நடைபெற்றால், கேள்விகளை எப்படி முறையாக்குவது? தேர்தலில் யாரைப் பொறுப்பாக்குவது?
எங்கள் மூன்று நிறுவனங்கள்—சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம்—புதுபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவை தங்கள் சொந்தப் பகுதியில் செயல்படும்போது சிறப்பாக செயல்படுகின்றன. ஒருவர் மற்றவரின் துறையில் ஊடுருவுவது சவாலை உருவாக்குகிறது, இது நல்லதல்ல. இது சமநிலையை சீர்குலைக்கலாம். இந்த மூன்று நிறுவனங்களுக்கிடையேயான உறவு ஆரோக்கியமானதாக, இதமானதாக, ஆழ்ந்த புரிதலுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்க வேண்டும், அதிகாரக் காட்டலாக இருக்கக் கூடாது என்று துணை ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட முடியுமா? ஜனாதிபதியை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது. பிரிவு 142 ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையை போல சுப்ரீம் கோர்ட்டு மாற்றி உள்ளது. சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்ற பணிகளை நீதிபதிகள் செய்கின்றனர்.
சூப்பர் பார்லிமெண்ட் போல நீதிபதிகள் செயல்படுகின்றனர். ஜனநாயகத்திற்காக நாங்கள் ஒருபோதும் பேரம் பேசவில்லை என்றும் அவர் கூறினார்.
மசோதா தொடர்பான வழக்கில் ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில் தன்கர் இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார். மசோதா விவகாரத்தில் முடிவெடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.




