‘நம் இதயங்களில் மீண்டும் கோபக்கனல் எழுந்துள்ளது’.. நடிகர் அக்ஷய் குமார்

பயங்கரவாதிகளுக்கு நாம் சொல்ல வேண்டியது ஒன்றுதான்.. என மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
மும்பை, ஏப்ரல் 27 2025:

அக்ஷய் குமார் நடிப்பில் கேசரி 2 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலையை, அதன் பின்னணி குறித்து சொல்லப்படாத பக்கங்களை இந்தப் படம் விவரிக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் வெற்றி விழா மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று (ஏப்ரல் 26 2025) நடைபெற்றது. இந்தப் பட விழாவில் பேசிய நடிகர் அக்ஷய் குமார், ” மீண்டும் நாம் கோபமான ஒரு நிகழ்வை சந்தித்துள்ளோம்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ” துரதிஷ்டவசமாக நம் இதயங்களில் மீண்டும் கோபக்கனல் எழுந்துள்ளது; நான் என்ன பேசுகிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இன்றும் அந்த பயங்கரவாதிகளுக்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்; அது என்ன என்பதையும் நான் இந்த படத்தின் மூலம் சொல்லி இருக்கிறேன்” என்றார். அப்போது அவருடன் நடிகர் மாதவன் உடன் இருந்தார். கேசரி 2 படத்தில் நடிகர் மாதவன் இரண்டாம் ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் ஈவு இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதைக் குறிப்பிட்டு நடிகர் அக்ஷய் குமார் இவ்வாறு பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




