
பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் அல்லது அந்நாட்டில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதத்துள்ளது.
புதுடெல்லி மே 3 2025:

பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் இந்தியாவில் இறக்குமதி செய்வதைத் தடை செய்யும் அறிவிப்பை வர்த்தகம் – தொழில்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT-டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானில் இருந்து நேரடியாகவோ அல்லது வேறு எந்த வர்த்தக வழியிலோ பொருட்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்கிறது.

2 மே 2025 தேதியிட்ட அறிவிப்பு எண். 06/2025-26 மூலம் வெளியிடப்பட்ட உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் (FTP 2023) ஒரு புதிய பிரிவாக, பத்தி 2.20ஏ என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
அதில், “பாகிஸ்தானில் இருந்து உற்பத்தியாகும் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் நேரடி அல்லது மறைமுக இறக்குமதி அல்லது போக்குவரத்து, மறு உத்தரவு வரும் வரை உடனடியாக தடைசெய்யப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்காகவும், பொதுக் கொள்கையின் அடிப்படையிலும் இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கப்பல்களுக்கும் தடை:
பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதேபோல், இந்திய கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள், பாகிஸ்தான் துறைமுகங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது . மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் உத்தரவு.

கங்கா விரைவுச் சாலையில் விமானப்படை பயிற்சி:
இதற்கிடையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப் படை விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை பார்த்து வருகின்றன. ரபேல், மிக் 29, மாக்1, சுகாய் 30 உள்ளிட்ட விமானங்கள் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகான இந்த ஒத்திகை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.




