தமிழகம்

‘நம்பர் ஒன் முதல்வர்’ என்பதைவிட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் எனது இலக்கு : முதல்வர் ஸ்டாலின்

விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் ரூ.4 கோடியில் கட்டப்பட்ட ஏ.கோவிந்தசாமி மணிமண்டபம், ரூ.5.70 கோடியில் கட்டப்பட்ட சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். தொடர்ந்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிவைத்து, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

1987-ல் அதிமுக ஆட்சியில் வன்னிய சமுதாய மக்கள், சமூகநீதி உரிமைக்காகப் போரடியபோது சுட்டுக் கொல்லப்பட்னர். 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மேலும், 21 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் கருணைத்தொகையும், மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியமும் திமுக வழங்கியது. சாலை மறியலில் கைதான 2 லட்சம் பேர் மீதான வழக்குகளும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 5 பேரின் வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்துக்காக முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட சமூகநீதி இயக்கம் திமுக. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலர் குறைகளை மட்டுமே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள குறைபாடு. அவர்களும் நல்லது செய்ய மாட்டார்கள், அடுத்தவர்களையும் நல்லது செய்ய விடமாட்டார்கள்.

‘நம்பர் ஒன் முதல்வர்’ என்பதைவிட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்பதுதான் எனது இலக்கு. அதற்காகத்தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்கின்ற திட்டங்களை அமல்படுத்துகிறோம். யாருக்கும் யாரும் அடிமை இல்லை, எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிடக் கருத்தியலை சமரசமின்றி செயல்படுத்துவதே எனது லட்சியம். மாநிலத்தை முன்னிலைப்படுத்தியே பணியாற்றுவதால்தான், திமுக ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்று பெருமிதத்துடன் கூறுகிறோம். ஸ்டாலின் ஆட்சி என்று கூறி தற்பெருமை தேடிக்கொள்ளும் குறுகிய சிந்தனை எனக்கில்லை.

திராவிடம்தான் நமது தாய் மண்ணுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம்தான் அன்னைத் தமிழ்மொழிக்கு செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்தது. திராவிடம்தான் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தது. திராவிடம்தான் பெண் விடுதலைக்காக போராடி, பெண்களைப் படிக்க வைத்தது. மொத்தத்தில் திராவிடம்தான் நவீனத் தமிழகத்தை உருவாக்கியது.

திராவிடம் இருப்பதால்தான் நாட்டின் பிற பகுதிகளில் இருப்பதுபோல், ஆதிக்க சக்திகளால் பிற்போக்கு கும்பல்கள் இங்கு தலைதூக்க முடியவில்லை. அதனால்தான் போலிகள், துரோகிகள் துணைகொண்டு, பலமுனை தாக்குதலை நடத்தும் எதிரிகள் சோர்ந்து போகிறார்கள். நவீன தமிழகம் திமுக ஆட்சியால், அண்ணாவால், கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. எல்லா துறைகளிலும் தற்போது தமிழகம் உன்னதமான இடத்தில் இருக்க திராவிட மாடல்தான் காரணம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், எம்ஆர்கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சாமிநாதன், ராஜேந்திரன், சிவசங்கர், சி.வெ.கணேசன், எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், தரணிவேந்தன், எம்எல்ஏ-க்கள் மஸ்தான், லட்சுமணன், அன்னியூர் சிவா, மணிக்கண்ணன், சிவக்குமார், கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button