இந்தியா

பட்ஜெட் 2025: முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் 2025- 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

“அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வருமான வரி மசோதா

  • வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது.
  • புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
  • காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
  • இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை
  • தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக
  • 2005: ₹1 லட்சம்
  • 2012: ₹2 லட்சம்
  • 2014: ₹2.5 லட்சம்
  • 2019: ₹5 லட்சம்
  • 2023: ₹7 லட்சம்
  • 2025: ₹12 லட்சம்
  • ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிப்பு
  • வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும்

தொழில்துறை அறிவிப்புகள்

  • ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும்.
  • முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும்.
  • இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன.

விவசாயத்துறை அறிவிப்புகள்

  • பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது.
  • பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும்.
  • இந்த பட்ஜெட்டில் 10 முக்கியப் பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.
  • வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.
  • அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும்.
  • உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும்.
  • எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும்.
  • கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கல்வி

  • பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும்.
  • ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.
  • கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000இல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும்.

மற்ற அறிவிப்புகள்

  • உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றின் விலைகள் குறையும் எனத் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
  • இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சக்‌ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன் பெறுவர். இதனுடன், ஒரு கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர்.
  • புத்தரின் காலம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
  • தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.
  • மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button