
‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
பெர்லின் (ஜெர்மனி) மே 23 2025:

‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என ஜெர்மனி நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் பாகிஸ்தான் நாட்டுக்கு வலுவான செய்தி ஒன்றை அளித்துள்ளார்.
ஜெர்மன்-இந்தியா அமைச்சர்கள் பெர்லினில் சந்தித்துப் பேசுகையில் அமைச்சர் ஜெய்சங்கர் இதனை கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலளித்ததைத் தொடர்ந்து நான் பெர்லினுக்கு வந்துள்ளேன்.
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது” என்றார். இதனை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியப் பெண்களின் கணவன்மார்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை முன்னெடுத்தது.
மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களை விடுத்தது. இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை ஜெய் சங்கர் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




