உலகம்
Trending

ரயிலை கடத்திய பாகிஸ்தான் கிளர்ச்சியாளர்கள்- பிணைக்கைதிகள் நிலை என்ன ?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை கிளர்ச்சியாளர்கள் குழு கடத்தியுள்ளது. ரயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த 100 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதகாவும் பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சி குழு அறிவித்துள்ளது.

9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் சென்றுகொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் திடீரென ஓட்டுநரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் ஒரு வெறிச்சோடிய பகுதியில் நின்றுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்துள்ளனர். அவர்களை தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். அப்போது, ரயிலில் இருந்த பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், தீவிரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இந்த ரயில் கடத்தலுக்கு பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army-BLA) எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரயிலில் இருந்த பயணிகளை விடுவித்துவிட்டதாகவும் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்களை மட்டுமே பிடித்து வைத்து இருப்பதகாவும் கூறிய பலோச் அமைப்பு, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் அனைவரும் கொல்லப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.

க்வெட்டாவிலிருந்து பெஷாவருக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது போலான் மாவட்டத்தில் இந்தத் தாக்குதல் நடந்ததாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க போலான் மாவட்டத்துக்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் ரயில் மற்றும் பயணிகளின் நிலைமை குறித்து உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் ஷாஹித் ரிண்ட் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடம் இருந்து பலுசிஸ்தானை விடுவிக்க பிஎல்ஏ உட்பட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த பிறகு, அது பலுசிஸ்தானை தன்னுடன் இணைத்துக்கொண்டது. அது முதல் பலுசிஸ்தான் விடுதலைக்காக பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. எண்ணெய் மற்றும் கனிம வளம் மிக்க பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமாக பலுசிஸ்தான் உள்ளது. எனினும், இந்த மாகாணம் குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ளது. பாகிஸ்தான் மத்திய அரசு, பலுசிஸ்தானுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், தங்கள் மாகாணம் சுரண்டப்படுவதாகவும் பலுசிஸ்தான் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button