
மேற்கு வங்காள பாஜகவின் திலீப் கோஷ் இன்று (ஏப்.18 2025) 60 வயதில் திருமணம் செய்து கொள்கிறார். யார் இந்த ரிங்கு மஜும்தார்?

கொல்கத்தா, ஏப்.18 2025
மேற்கு வங்காள பாரதிய ஜனதா கட்சியின் திலீப் கோஷ் வெள்ளிக்கிழமை மாலை திருமணம் செய்து கொள்ள உள்ளார். 60 வயதான திலீப் கோஷ், ரிங்கு மஜும்தாரை மணக்கவுள்ளதாக, அவர்களுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுலனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரிங்கு மஜும்தார் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் இருவரும் வாக்கிங் சென்ற இடத்தில் சந்தித்துள்ளனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் வளர்ந்துள்ளது.
இந்தக் காதல் திருமணத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க திலீப் கோஷ், தனது இளமைப் பருவத்திலிருந்தே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

திருமணம் செய்துக் கொள்வது ஏன்?- கோஷ் பேட்டி
இவர், 2015 இல் பாஜகவில் தீவிரமாகச் செயல்படுவதற்கு முன்பு நாடு முழுவதும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
முன்னதாக திலீப் கோஷ் அளித்த பேட்டி ஒன்றில், “என் அம்மா, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்தை நிறைவேற்ற, நான் திருமணம் செய்து கொள்கிறேன்.
நான் முன்பு போலவே தீவிர அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன். எனது தனிப்பட்ட வாழ்க்கை எனது அரசியல் பணிகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்றார். கோஷ், காரக்பூரின் முன்னாள் எம்.பி. ஆவார்.

யார் இந்த மஜும்தார்?
கோஷ்க்கு இது முதல் திருமணம் என்றாலும், ரிங்கு மஜும்தாருக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு முதல் திருமணத்தில் மகன் ஒருவர் உள்ளார்.
மேலும், மஜும்தார் பாரதிய ஜனதா கட்சியில் ஒபிசி பிரிவில் முக்கிய பதவிகள் வகித்துள்ளார். இவர் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஐ.டி. நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




