முதல் போட்டியிலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகள்.. தோனியின் பாராட்டு. : யார் இந்த விக்னேஷ் புத்தூர் ?

கேரளாவைச் சேர்ந்த 24 வயது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் 30 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவர் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா சேர்ந்தவர் இவரது தந்தை சுனில் குமார் ஒரு “ஆட்டோரிக்ஷா ஓட்டுநர்” ரொம்பவே கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும், அவரது குடும்பம் அவரது கிரிக்கெட் கனவுகளை ஆதரித்தது. தனது கிரிக்கெட் பயணத்தை மேம்படுத்த, மலப்புரத்தில் இருந்து திருச்சூருக்கு இடம்பெயர்ந்தார். தற்போது, திருச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் MA இலக்கியம் பயின்று வருகிறார்.

- விக்னேஷ் தனது கிரிக்கெட் வாழ்க்கையை மிதவேகப் பந்து வீச்சாளராக தொடங்கினார், ஆனால் பின்னர் உள்ளூர் வீரர் முகமது ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் சுழற்பந்து வீச்சுக்கு மாறினார். கேரளாவின் U-14 மற்றும் U-19 அணிகளில் விளையாடிய அவர், மூத்த அளவில் கேரளாவுக்காக இதுவரை அறிமுகமாகவில்லை. ஆனால், 2024 ஆம் ஆண்டு கேரள கிரிக்கெட் லீக் தொடரில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடியபோது, மும்பை இந்தியன்ஸ் திறமை தேடல் குழுவினரின் கவனத்தை ஈர்த்தார். அங்கு 3 போட்டிகளில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்தாலும், அவரது தனித்துவமான “சைனாமன்” பந்து வீச்சு பாணி அவருக்கு வாய்ப்பைப் பெற்றுத் தந்தது.2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், மும்பை இந்தியன்ஸ் அவரை SA20 தொடரில் MI கேப் டவுன் அணியில் நெட் பவுலராகபயிற்சிக்கு அனுப்பியது. அங்கு அவர் உலகின் சிறந்த மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ரஷீத் கானுடன் பயிற்சி பெற்றார்.
- ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த ஆட்டத்தில், விக்னேஷ் புத்தூர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கினார். ரோகித் ஷர்மாவுக்கு பதிலாக அறிமுகமான அவர், தனது முதல் ஓவரிலேயே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் சிவம் துபே மற்றும் தீபக் ஹூடா ஆகியோரையும் வீழ்த்தி, 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவரது தைரியமான பந்து வீச்சு அனுபவமிக்க சுழற்பந்துக்கு எதிராக விளையாடும் வீரர்களையும் திணறவைத்தன.
விக்னேஷ் புத்தூர், ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து தாக்குதலுக்கு முக்கிய பங்களிப்பாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது திறமையும், அர்ப்பணிப்பும் அவரை எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறும் வீரராக உயர்த்தலாம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.




