லைஃப் ஸ்டைல்

சன்டே ஸ்பெஷல்- செட்டிநாடு ஸ்டைலில் அட்டகாசமான ஒரு மட்டன் கிரேவி செய்யலாம் வாங்க !

இந்த சன்டே ஸ்பெஷலாக என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மட்டன் எடுத்தால், செட்டிநாடு மட்டன் கிரேவியை செய்யுங்கள். இந்த செட்டிநாடு மட்டன் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த கிரேவியை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு வீட்டில் உள்ளோர் கேட்பார்கள். அந்த அளவில் சுவை பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மட்டன் வேக வைப்பதற்கு… * எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் * இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் * மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் * மட்டன் – 1/2 கிலோ * உப்பு – சுவைக்கேற்ப * மிளகாய் தூய் – 1 டீஸ்பூன் * தண்ணீர் – 1 டம்ளர்

மசாலா அரைப்பதற்கு… * மல்லி – 2 டேபிள் ஸ்பூன் * மிளகு – 1 டேபிள் ஸ்பூன் * சீரகம் – 1 டீஸ்பூன் * சோம்பு – 1 டீஸ்பூன் * பட்டை – 2 துண்டு * ஏலக்காய் – 1 * கிராம்பு – 3 * வரமிளகாய் – 2 கிரேவிக்கு… * எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் * பட்டை – 2 துண்டு * கிராம்பு – 3 * சோம்பு – 1 டீஸ்பூன் * கறிவேப்பிலை – 1 கொத்து * சின்ன வெங்காயம் – 150 கிராம் (பொடியாக நறுக்கியது) * தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது) * இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன் * கொத்தமல்லி – சிறிது

செய்முறை: * முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். * பின் அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மிளகாய் தூளையும் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். * 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, மட்டனை கிளறி, பின் அதில் 1 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும். * அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். * அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை நீங்கி, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விட வேண்டும். * பின்பு வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் மீண்டும் வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு மட்டன் கிரேவி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button