கோவை தனியார் பள்ளியில் மாணவிக்கு அநீதி – பெண் நிர்வாகி சஸ்பென்ட்


தனியார் பள்ளியில் மாதவிலக்கை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே
செங்குட்டை பாளையத்தில் சுவாமி சிப்பவானந்த மெட்ரிகுலேஷன் பள்ளி (தனியார் பள்ளி) இயங்கி வருகிறது.

இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஐந்தாம் தேதி பூப்பெய்தி உள்ளார். எனினும் தற்பொழுது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்துள்ளார்.
ஆனால், சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் இந்த செயல் குறித்து சிறுமியின் தாயார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பள்ளி நிர்வாகம் இப்படித்தான் செயல்படுவோம் என கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பூப்பெய்திய மாணவியை வெளியே உட்கார வைத்து தேர்வெழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் ஆனந்தியை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.




