
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பிறகு இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாய் நியமிக்கப்பட உள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா புதன்கிழமை (ஏப்ரல் 16, 2025) நீதிபதி பூஷன் ராமகிருஷ்ணா கவாயின் பெயரை அடுத்த தலைமை நீதிபதியாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி கன்னாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த நீதிபதியான நீதிபதி கவாய், மே 14 அன்று பதவியேற்கிறார்.
இவர், நாட்டின் 52 வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். முன்னதாக, மே 13 அன்று தற்போதைய தலைமை நீதிபதி கன்னா ஓய்வு பெறுகிறார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற நீதிபதி கவாய், தலைமை நீதிபதியாக ஆறு மாதங்களுக்கும் மேலாக பதவி வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கவாய் நவம்பர் 23, 2025 அன்று ஓய்வு பெறுகிறார். நவம்பர் 24, 1960 அன்று அமராவதியில் பிறந்த நீதிபதி கவாய், நவம்பர் 14, 2003 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
மேலும், நவம்பர் 12, 2005 அன்று உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். நீதிபதி கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல அரசியலமைப்பு அமர்வுகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளார், அவை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது.




