
“ஆளுநரின் அதிகாரம் என்பது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தபால்காரராக இருப்பது மட்டுமே” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை ஏப் 20 2025
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுத்திருக்க வேண்டும் என்றும், மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தனது சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.

ஆளுநர் வெறும் தபால்காரர்
இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், “மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான். தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பாஜககாரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.” எனக் கூறியுள்ளார்.




