
சென்னை ஏப் 21 2025

“பாட்ஷா” திரைப்பட விழாவில் தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவியுள்ளது என்று ரஜினி குறிப்பிட்டதால், தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் விளைவாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினிக்கு மோதல் ஏற்பட்டது. இதனால், அவர் அரசியலில் இறங்குவார் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர். எனினும், அவர் திமுகவையும், மூப்பனாரின் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியையும் இணைந்து கூட்டணி அமைக்க வழிவகுத்தார். ரஜினியின் ஆதரவு காரணமாக மக்கள் அக்கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி அடைய செய்தனர். இதன் விளைவாக அதிமுக தோல்வி அடைந்தது.

அதன் பிறகு, ரஜினி நடித்த பல படங்களில் ஜெயலலிதாவை மறைமுகமாகக் குறிவைத்து வசனங்கள் பேசினார். **படையப்பா** படத்தில் வந்த நீலாம்பரி கதாபாத்திரம் கூட ஜெயலலிதாவை முன்னிறுத்தியே உருவாக்கப்பட்டது. இதை அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு ஊடகத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். பாண்டியன், அண்ணாமலை, முத்து, படையப்பா, பாபா போன்ற படங்களில் அரசியல் ரீதியான வசனங்களை ரஜினி பேசியுள்ளார்.

ரஜினி கண்டிப்பாக அரசியலில் இறங்குவார் என்று அவரது ரசிகர்கள் 25 ஆண்டுகளாக காத்திருந்தனர். இறுதியில் அவர் அரசியலில் இறங்குவதாக அறிவித்தாலும், “எனது உடல் நிலை அரசியலுக்கு ஏற்றதல்ல” என்று மருத்துவர்கள் கூறியதால், தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என தனது முடிவை அறிவித்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் நினைவு நாளில் வெளியான வீடியோவில், ரஜினி கூறியதாவது:

பாட்ஷா பட விழாவில், படத்தின் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மேடையில் இருந்தபோது நான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். இதைக் கோபமாக எடுத்துக்கொண்ட ஜெயலலிதா, வீரப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். இதனால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். ஜெயலலிதாவை நான் எதிர்க்க பல காரணங்கள் இருந்தாலும், இதுவே முக்கியமான ஒன்று என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நடிகையும், பாஜக முக்கிய பிரமுகருமான குஷ்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்த போது, ரஜினிகாந்தை சந்தித்து தாம் அரசியல் குறித்து பேசியதாக கூறினார். சரியான நேரத்தில் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கியிருந்தால், தமிழ்நாட்டின் அரசியல் வரைபடமே மாறியிருக்கும் என்றும் குஷ்பு குறிப்பிட்டார்.




