

சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை!
டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் உரிமையாளரான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சாம் பிட்ரோடா மற்றும் பலர் மீது அமலாக்க இயக்குநரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ஏப்.15 2025 அன்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்த வழக்கானது, ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் 2025 ஏப்.9ஆம் தேதி ஏற்கனவே அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. இதற்கிடையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 44 மற்றும் 45 இன் கீழ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, துணை குற்றப்பத்திரிகையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் வெளிநாட்டுத் தலைவர் சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர மேலும் யங் இந்தியன், டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சுனில் பண்டாரி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இணைந்து யங் இந்தியன் நிறுவனத்தில் 76% பெரும்பான்மை பங்குகளை வைத்திருந்தனர்.

மீதமுள்ள பங்கு மறைந்த வோரா மற்றும் பெர்னாடஸ் வசம் இருந்தது. விசாரணையின் போது, ஏஜேஎல் அதன் வெளியீட்டு நடவடிக்கைகளை 2008 ஆம் ஆண்டு மூடிவிட்டதாக அமலாக்கத் துறை கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு (ஏஐசிசி) ₹90.21 கோடி கடனை திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தாலும், ஏஐசிசி அந்தக் கடனைத் திரும்பப் பெற முடியாததாகக் கருதி, அதை யங் இந்தியனுக்கு வெறும் ₹50 லட்சத்திற்கு விற்றது எனக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது




