புதிய போப் தேர்வு – பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து…!

“போப் பதினான்காம் லியோ” நேற்று முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வாடிகன் மே 9 2025 :

புதிய போப் தேர்வு..!
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவாக தேர்வு செய்யப்பட்டார் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட். அமெரிக்காவில் இருந்து தேர்வான முதல் போப்பான இவர் ‘போப் பதினான்காம் லியோ’ என அழைக்கப்படுவார்.
சிஸ்டைன் தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய போப் தேர்வானதை அடுத்து வெண்புகை வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில்,புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இந்திய மக்கள் சார்பாக புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமைத்துவத்தை, உலகளாவிய அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையை மேம்படுத்துவதில் அதன் ஆழ்ந்த முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“புனித போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமைத்துவம் தொடங்குகிறது. நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடலுக்கும், ஈடுபாட்டிற்கும் இந்தியா உறுதிபூண்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.




