
மும்மொழிக் கொள்கை விவகாரத்திலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தமிழ்நாடு வெற்றி பெறும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மே 18 2025:

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நூலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலினுடன், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக் விஜய் சிங், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால கவுடா, மேனாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற & உறுப்பினர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, `தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை’ நூலை ஸ்டாலின் வெளியிட திக் விஜய் சிங் பெற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, ஸ்டாலினுக்கு அங்குசம் ஒன்றை அன்பில் மகேஷ் பரிசளித்தார்.

தேசியக் கல்விக் கொள்கை உருவாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகளின் பங்களிப்பு என்ன? இதனால் ஆசிரியர்களுக்கு என்ன பாதிப்பு? ஏழை எளிய மாணவர்களைக் கல்வியிலிருந்து இது வெளியேற்றும் என ஏன் சொல்கிறோம்? போன்ற பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டு உள்ளது. இந்நூலினை ஆங்கிலத்திலும் அன்பில் மகேஷ் எழுதியிருக்கிறார்.

நூலை வெளியிட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார். மேலும், மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுத்ததால் மத்திய அரசு ரூ.2 ஆயிரத்து 152 கோடியை விடுவிக்க மறுக்கிறது எனவும் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிடும். மேலும், உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு வெற்றி பெறும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை ஏற்க மறுப்பு
முன்னதாக தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கைதான் தொடரும் என மு.க. ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தை ஏற்க மறுப்பதால் உரிய நிதியை மத்திய அரச விடுவிக்க மறுக்கிறது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு, மேற்கு வங்கம் மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய கல்வி அமைச்சர் திமுக இந்த விவகாரத்தில் அரசியல் லாபத்துக்காக கபட நாடகம் ஆடுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




