
கடன் வழங்கும் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வசூலிப்பதைத் தடுக்க வகைசெய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
சென்னை ஏப்ரல் 26 2025

தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறு நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஒரு குழுவாக பெண்களை திரட்டி கடன் அளித்து வருகிறது. குறிப்பிட்ட காலம் வரை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை தவணையாக செலுத்த வேண்டும் என விதி வைத்துள்ளது.
ஒரு மாத தவணை கட்ட தாமதமானாலும் அடாவடியாக வீட்டிற்கு முன்பு வந்து நின்று வசூலிப்பதை நிதி நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். கிராமப் புறத்தில் உள்ள தினக் கூலி வேலைக்கு செல்லும் மக்களால், உடனடியாக பணம் ஏற்பாடு செய்ய முடியாத நிலையில், அவகாசம் கூட வழங்காமல் உடனே செலுத்த நிர்பந்திப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இது தொடர்பாக மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். மசோதாவில், “தனி நபர்கள், தனி நபர்கள் குழு, மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.
வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் உள்ள பூசல்களை தீர்த்து வைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமனம் செய்யலாம்.

கடன் வழங்கிய நிறுவனமானது கடன் பெற்றவரையோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ அல்லது அவர்களின் சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
வலுக்கட்டாய நடவடிக்கைகள் மூலம் கடனை வசூல் செய்தால், ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்ட முன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோருக்கு ஜாமீன் கிடைக்காது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




