
நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி வைத்திருந்ததாக 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் சட்டவிரோதமாக தங்கம், வெள்ளி வைத்திருந்ததாக 9 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர் என பி.டி.ஐ தெரிவித்துள்ளது. காத்மாண்டு பெருநகர நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சட்டவிரோத தங்கம் மற்றும் வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக இந்தியாவை சேர்ந்த 9 பேர் கைது புதன்கிழமை (ஏப்.16 2025) செய்யப்பட்டனர்.
இது குறித்து நேபாள காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காத்மாண்டுவில் உள்ள பல்வேறு தங்க சுத்திகரிப்பு மையங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து 1.76 கிலோ தங்கம் மற்றும் 18.45 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து நேபாள ரூபாய் 17 மில்லியன் மற்றும் இந்திய ரூபாய் 11,700 ஆகியவற்றையும் போலீசார் மீட்டனர். காத்மாண்டு மாவட்ட காவல் வட்டத்தைச் சேர்ந்த காவல் குழு இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட 9 இந்தியர்களிடம் இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களுக்கான எந்தவொரு ரசீதுகள் அல்லது வேறு எந்த துணை ஆவணமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




