ரியல் எஸ்டேட் தொடர்பான பணமோசடி வழக்கு – தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுக்கு சம்மன்..!

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொடர்பான பணமோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஹைதராபாத் ஏப் 22 2025

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஹைதராபாத் அடிப்படையிலான ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், அமலாக்கத்துறை (ED) மகேஷ் பாபுவை ஏப்ரல் 28ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துள்ளது.
இந்த வழக்கு, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் ஆகிய நிறுவனங்கள் மீது, திட்டங்களை நேரத்தில் வழங்காததற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.. மகேஷ் பாபு, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ‘Green Meadows’ திட்டத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தார். பொதுமக்களை ஏமாற்றி, அனுமதியில்லாத நிலங்களை விற்பனை செய்தது, ஒரே நிலத்தை பலருக்கு விற்றது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக மகேஷ் பாபு இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ₹5.9 கோடி தொகை தொடர்பான பரிவர்த்தனைகளைப் பற்றி அமலாக்கத்துறை விளக்கம் பெற விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் குற்றவாளியாக கருதப்படவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்களின் ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு அவர் மோசடி பற்றி தெரியாமல் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்றும் பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.




