மாட்டிக்கொண்ட 'மட்டன் பிரியர்'- வலைவீசி பிடித்த வனத்துறை !

கோவை: கோவை ஓணாப்பாளயத்தில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது. தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 4 ஆடுகளை இந்த சிறுத்தை வேட்டையாடிக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
கோவையை அடுத்த ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தோட்டத்தில் புகுந்த சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளை கொன்று ஒரு ஆட்டை கவ்விச் சென்றது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் மீண்டும் அதே பகுதிக்கு ஆடுகளை தேடி சிறுத்தை வந்து சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு 11.35 மணியளவில் அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்குள் புகுந்துள்ளது தெரியவந்தது.
இதையடுத்து வனச்சரக பணியாளர்கள், ஆனைமலை புலிகள் காப்பக வன கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ‘ட்ராப் நெட்’ மூலம் சிறுத்தையை பிடித்து கூண்டில் அடைத்தனர். அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.




